தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.. மேலும் பாரதிராஜாவுக்கு இரங்கல் அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்..
அதில் “ தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையை தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – ‘இசைஞானி’ இளையராஜா – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் – தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : “பாரதிராஜா எங்கே என கருவேலம் மரம், கரிச்சான் கேட்குமே.. என்ன பதில் சொல்வேன்..” வைரமுத்து கண்ணீர் இரங்கல்..!



