தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் களைகட்டி உள்ளது.. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.. தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 1 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதவிதமான வழிகளில் வாக்காளர்களை ஈர்க்கும் வேட்பாளர்களில் சில சுவாரஸ்யமான தேர்தல் பிரச்சாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொண்டர்களும் ரசிகர்களும் விஜய்க்கு வழி நெடுகிழும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அப்போது வேல், புகைப்படம், கோப்பை போன்ற பல பொருட்கள் விஜய்க்கு பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது தவெக தொண்டர் ஒருவர் டெடி பியர் பொம்மையை விஜய் மீது தூக்கி எறிந்தார். அதைப் பெற்றுக் கொண்ட விஜய் தனது அருகே அந்த பொம்மையை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்தார்.

மாவட்ட வாரியா பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் காலை நடைப்பயிற்சி செல்லும் போது, அப்பகுதியில் உள்ள சிறிய டீக்கடையில் நின்று, அங்குள்ள மக்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டே டீ குடித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கிறார். அதே பாணியை பின்பற்றி திமுக அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிக்கிறார்.
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் களம் இறங்கும் ஆதவ் அர்ஜூனா பிரச்சாரத்தின் போது, வீட்டு வாசலில் அமர்ந்து “அம்மா எனக்கு ஒரு தோசை போடுங்க” எனக் கேட்டு வாங்கி சாப்பிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
தவெக தலைவர் விஜயின் நெருங்கி நண்பரும், நடிகருமான சஞ்சீவ் ராயபுரம் தவெக வேட்பாளர் தாமுவை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். தவெக கொடிகளை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இரு கட்சியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது, நடிகர் சஞ்சீவும், ஜெயக்குமார் சிரித்தபடி கையசைத்துக்கொண்ட சுவாரஸ்யம் நிகழ்ந்தது.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.என். நேரு, தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக கருமண்டபம் பிரச்சாரத்தின் போது அவரை ஆதரித்து பேசிய 6 வயது சிறுமி சாய்ஸ்ரீ தனது உரையால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தவெக வேட்பாளர் விஜய்யின் பொம்பையுடன் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் என்.எஸ். விஜி என்பவர் போட்டியிடுகிறார். இவர் விஜய் பொம்மை வைத்து வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளானது.
பல்லாவரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் சலவை தொழிலாளர் கடைக்குச் சென்று சட்டைக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார். திமுக சார்பாக செய்யாறு தொகுதியில் போட்டியிடும் ஜோதி என்பவர் கொளுத்தும் வெயிலில் ஜூஸ் போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல் காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ராகு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிலம்பம் சுற்றி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
Read more: டேபிள் ஃபேன் vs சீலிங் ஃபேன்.. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க எது சிறந்தது..?



