கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் ரக்ஷிதா சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 6-வது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அந்த போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி 2-வது இடத்தை பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகள், சினிமாக்களில் பல்வேறு பாடல்களை பாடி தற்போது முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில்தான் இவர் விபத்தில் சிக்கியிருக்கிறார். மலேசியாவுக்கு சென்றிருக்கும் இவர் காரில் செல்லும்போது விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
இதில் காரில் பயணித்த பாடகி ரக்ஷிதா உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாடகி ரக்ஷ்தாவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கினேன். இன்று காலை மலேசியா விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நான் சென்ற கார் சாலை தடுப்பின்போது மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த சில நொடிகளில் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன் தோன்றின. ஏர் பேக்குகளுக்கு நன்றி. நடந்த நிகழ்வில் இருந்து மீளாமல் இன்னும் நான் அதிர்ச்சியில் உள்ளேன். கார் ஓட்டுநர் மற்றும் என்னுடன் காரில் வந்த சக பயணிகளும் இந்த விபத்தில் இருந்து தப்பினர்.
அவர்களுக்கு வெளியில் லேசான காயங்கள், லேசான உள் காயங்களும் உள்ளன. நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார். ரக்ஷிதாவின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் பொதுமக்கள் பலரும் ஆறுதலாக பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.