மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில், ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். குறிப்பாக, பெங்களூரு (மத்திய) மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்குத்திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
அரசியல் ரீதியாக நீக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாக்குத் திருட்டு முறைகேடு குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப்பகலில் பாஜக கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read more: KTM பிரியர்களே ரெடியா..? இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் கேடிஎம் 160 டியூக்.. விலை இதுதான்..!!