வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் அம்சமாக, அதிமுக–பாஜக கூட்டணியை மேலும் உறுதியானதாக மாற்றுவது குறித்து பேசப்பட்டது. தற்போதுள்ள கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி, மூமுக உள்ளிட்ட அமைப்புகளை கூட்டணிக்குள் நிலைநிறுத்துவது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. சிறிய கட்சிகளின் ஆதரவும் தேர்தலில் முக்கியம் என பியூஷ் கோயல் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது அம்சமாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணி கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. இவர்கள் கூட்டணியில் இணையாத பட்சத்தில் ஏற்படக்கூடிய அரசியல் பாதிப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேவையானால், இவர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்கீடுகள் வழங்க பாஜக தனது பங்கில் மாற்றங்கள் செய்யலாம் என்றும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது, தொகுதி பங்கீடு தொடர்பான ஆரம்ப நிலை பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகவும், அதிமுக தரப்பில் 23 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதிமுக மொத்தம் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த ஒரு ஆரம்ப வரைபடமும் இந்த சந்திப்பில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
நான்காவது அம்சமாக, திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளை எதிர்கொள்ளும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், வாக்குகள் பிரியும் சூழல் உருவாகி, அது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த நிலை கூட்டணிக்கு சாதகமாக அமையும் என பாஜக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஓபிஎஸ், தினகரன், புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையும் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.



