தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 8 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. கலைஞர் இல்லம், அண்ணா அறிவாலயம், அமலாக்கத்துறை அலுவலகம், அடையாறு போட் கிளப் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.. இந்த 8 இடங்களிலும் காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.. இந்த சோதனையில் இந்த மிரட்டல்கள் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
Read More : Breaking : கரூர் துயரம் : ”நான் விஜய்க்கு எதிராக பேசவில்லை..” மீண்டும் ஆதரவளித்த அஜித்..! பரபரப்பு அறிக்கை..



