டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த இளம்பெண்ணை காதலனே தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் பல்பீர் விஹாரில் வசிப்பவர் மோஹித். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில், இருவருமே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்த இளம்பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்து கடந்த 6 ஆண்டுகளாக மோஹித்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சில சமயம் அந்த பெண்ணை மோஹித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி மோஹித் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு பின் பக்கத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டிருந்தார். அப்போது வேலை முடிந்த வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் இதனை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
பின்னர், இதை பற்றி மோஹித்திடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், மோஹித் அந்த பெண்ணை அடித்து உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் அலறி துடித்த அந்த பெண்ணின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சேர்த்தனர். பலத்த தீக்காயம் அடைந்த அந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மோஹித் வீட்டில் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், புகார் அளித்ததை தொடர்ந்து மோஹித் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.