தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், கொமதேக கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக – தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.. அதன்படி, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் திமுக தலைவருமான முதல்வருமான ஸ்டாலின் – பிரேமலதா இருவரும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்..
திமுக கூட்டணியில் முதன்முறையாக இணைந்த தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்ற 2-வது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது.. திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 28 தொகுதிகளை பெற்றுள்ளது.. ஏற்கனவே தேமுதிகவுக்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



