சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்..
அதில் தனது பெயர், இசைஞானி என்ற பட்டப்பெயர், குரல், புகைப்படம் என சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது எனவும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.. அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிருந்தார்..
பல்வேறு யூ டியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக இளையராஜா தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது இளையராஜா தரப்பு, இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றி வருவாய் ஈட்டுவதாக குற்றம்சாட்டினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு என்று கேள்வி எழுப்பினார்..
அப்போது இளையராஜா தரப்பு, அவரின் பெயரையும் புகைப்படத்தையும் வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.. இது இளையராஜாவின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்று குறிப்பிட்டனர்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதியின்றி இளையராஜாவின் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.. சில நேரங்களில் அவதூறான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்..
இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.. மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி அனைத்து எதிர் மனு தாரர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்..
Read More : Breaking : போதை பொருள் வழக்கு.. நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் உட்பட 3 பேர் கைது!



