இந்தியாவில் 10 கோடி பேருக்கும், தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றாத நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகள் என்னென்ன மற்றும் மக்களிடம் இந்த நோய்கள் எவ்வளவு பரவி உள்ளது என்பதை கூறுகிறது.
இந்தியாவில் 11.4% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாகவும் நகர்ப்புறங்களில் 16.4% பேருக்கும், கிராமப்புறங்களில் 8.9% பேருக்கும் உள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 14.4% பேருக்கு, சுமார் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக கோவாவில் 26.4% பேருக்கும், குறைந்த பட்சமாக உத்தப்பிரதேசத்தில் 4.8% பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் ஐந்தாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில், அதாவது எதிர்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் (pre diabetic ) 15.3% பேர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.