ஜம்மு காஷ்மீரின் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசு எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன. இதனால், சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு அவ்வபோது ஏற்பட்டு வருகிறது. இமயமலையையொட்டி அமைந்த காஷ்மீரில் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குளிர்காலத்தில் வெப்பநிலையும் குறைந்து காணப்படும். இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படக்கூடிய மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அனந்த்நாக், பந்திப்பூர், பாரமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், தோடா, கிஷ்த்வார் மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் 2,000-2,500 மீட்டருக்கு மேல் (நடுத்தர ஆபத்து) பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ரியாசி, ரஜோரி மற்றும் ராம்பன் பகுதிகளில் (குறைந்த ஆபத்து) பனிச்சரிவானது 2,000-2,500 மீட்டருக்கு மேல் ஏற்படக் கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அனந்த்நாக், பாரமுல்லா, கந்தர்பால், தோடா, ரஜோரி மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.