பிரேசில் நாட்டை கடந்த திங்கட்கிழமை இரவு பெரும் புயல் ஒன்று தாக்கியது. இதில், அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின.
இதற்கிடையே, அங்கு ஒரே வீட்டில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரேசிலை தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புயலில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். புயலில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் 2,300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி இருக்கிறது. நகரின் ஆற்றில் மணிக்கு 2 மீட்டர் வீதம் நீர் அதிகரித்து வருவதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.