தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு (CBSE/ICSE- உட்பட) நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையிலுள்ள தமிழ்பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.
அதன்படி பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் (CBSE/ICSE-உட்பட) www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்