fbpx

1967 ஜூலை 18..!! உயிரை விட்ட தியாகி..!! இறங்கி வராத காமராஜர்..!! எகிறிய அண்ணா..!! ’தமிழ்நாடு’ என்ற பெயர் வந்தது இப்படித்தான்..!!

சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி ’தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்த நாள் தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த பெயர் மாற்றம் எப்படி வந்தது, இதனால் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…

‘மெட்ராஸ் ஸ்டேட் என்பதெல்லாம் பிரிட்டிஷார் காலத்தோடு போகட்டும்… நமது மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்த காலம் அது. “தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்துபோன பிறகும் தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது. இனி, தமிழர்கள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்றே எழுத வேண்டும்” என்றார் பெரியார்.

1967 ஜூலை 18..!! உயிரை விட்ட தியாகி..!! இறங்கி வராத காமராஜர்..!! எகிறிய அண்ணா..!! ’தமிழ்நாடு’ என்ற பெயர் வந்தது இப்படித்தான்..!!
அண்ணா – காமராஜர்

திமுக, இந்திய கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக இதை வலியுறுத்தி வந்தன. காங்கிரஸில் இருந்த சிலருக்கும் அந்த எண்ணம் இருந்தது. அதனால்தான் தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார் சங்கரலிங்கனார். ஆனால், அவற்றை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்தின்போதே உயிர் பிரிந்தார் சங்கரலிங்கனார்.

1967 ஜூலை 18..!! உயிரை விட்ட தியாகி..!! இறங்கி வராத காமராஜர்..!! எகிறிய அண்ணா..!! ’தமிழ்நாடு’ என்ற பெயர் வந்தது இப்படித்தான்..!!
சங்கரலிங்கனார்

அதன் பிறகு, சட்டமன்றத்துக்குள் நுழைந்த திமுக, 1957 மே 7ஆம் தேதி ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது. சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் தீர்மானம் என்பதால், முதலமைச்சர் காமராஜர் நிறைவேற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளும், எதிராக 127 வாக்குகளும் கிடைத்தன. இதனால், திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி அடைந்தது. ஆனால், பல மேடைகளில் அந்த முழக்கத்தைத் தொடர்ந்து எழுப்பியது திமுக.

தலைமைச் செயலகம்

1961 ஜனவரி 30இல் சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஆளுங்கட்சியினர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திற்கு உள்ளும் புறமும் எழுந்தது. அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்கக் கோரிக்கை விடுத்தார் காமராஜர். அது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டன. 3 நாட்களுக்கு இதே நிலைமை நீடித்தது. இதனால், காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. வேண்டுமானால், நிர்வாக ரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடலாம் என்றது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இதில் திருப்தி இல்லை.

இந்தக் கோரிக்கை இந்திய அரசியலில் பேசுபொருளாகக் காரணம் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அது தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் அவையில் பங்கேற்க முடியாததால், குப்தா தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்த காங்கிரஸ், தமிழ்நாடு என்று மாநிலத்துக்குப் பெயர் சூட்ட ஏன் மறுக்கிறது?” என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, மசோதாவை ஆதரித்துப் பேசினார். “சுமார் 500 வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு, ‘பரிபாடல்’, ‘பதிற்றுப்பத்து’, ‘மணிமேகலை’, ‘சிலப்பதிகாரம்’ உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லிப் பதிலளித்த அண்ணா, கம்பரும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், ‘தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?’ என்று கேட்டார். அதற்கு உடனே அண்ணா, ‘பார்லிமென்ட்டை லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்?’ என்றார். இருப்பினும், அந்தத் தனிநபர் மசோதா தோல்வியடைந்தது.

1963 ஜூலை 23 அன்று மீண்டும் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், “மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும்போது பெருமையாக இருக்கும். பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும்” என்றார். உடனே, ‘கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது எந்தவிதப் பிரச்சனையும் எழவில்லை. அப்படியிருக்க ஒரு மாநிலத்திற்கு எப்படிப் பிரச்சனை வரும்?’ என்று கேள்வி எழுப்பியது திமுக. சட்டமன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால் அந்தத் தீர்மானமும் தோல்வியை சந்தித்தது.

பின்னர், 1967ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு தமிழ்நாடு பெயர் சூட்டல் விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு – Tamil Nadu’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது. 1967 ஜூலை 18ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. “மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்ட வேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன் யோசனை சொன்னார். ஆனால், இறுதியில் தமிழ்நாடு என்ற பெயர் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் அண்ணா, “மத்திய அமைச்சர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘தமிழ்நாடு என்ற பெயரைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதில் தடை ஏதும் இல்லை’ என்றனர். ஆகவே, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார் அண்ணா. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துமே ஒருமித்த கருத்துக்கு வந்திருந்ததால், சட்டமன்றத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பதிவு செய்து பேசினார் அண்ணா. அத்தோடு, “நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது.

Chella

Next Post

’என் குழந்தைக்கு இவர் தான் அப்பா’..!! சஸ்பென்ஸை உடைத்தை இலியானா..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

Mon Jul 17 , 2023
நடிகை இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமானவரை வைத்து புதிர் போட்டி நடத்தி வருவதாகவே தெரிகிறது. முதலில் ஒரு டிசர்ட் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அதன் பின்னர், தனது பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு கர்ப்பத்துக்கு யார் காரணம் கண்டுபிடிங்க என்பது போல வேடிக்கை காட்டினார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது பார்ட்னரின் பிளர் புகைப்படத்தை வெளியிட்டு வெறுப்பேற்றிய இலியானா, ஒரு வழியாக தனது கர்ப்பத்துக்கு காரணமானவரின் […]
திருமணத்திற்கு முன்பே கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை இலியானா..!! அப்போ அது எப்படி..?

You May Like