பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக லூதியானா காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 பேர் கொண்ட குழுவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.மீட்பு குழு வாயுவின் வகை மற்றும் மூலத்தைக் கண்டறிய மாதிரி ஆய்வு செய்யும் என்று கூறினார். விசாரணையின் ஒரு பகுதியாக இறந்தவர்களின் ரத்த மாதிரியும் எடுக்கப்படும். இந்த வாயு உயிரிழந்தவர்களின் மூளையை பாதித்தது, நுரையீரலை அல்ல என்று மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்ததுடன் 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.