தஞ்சை மாவட்டம் கரந்தை குதிரைக்கட்டி தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் (23). இவர், கஞ்சா வியாபாரி என்று கூறப்படுகிறது. இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரதீப் வீட்டில் இருந்போது அவரை 3 வாலிபர்கள் அழைத்துள்ளனர். இதையடுத்து, வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிரதீப்பிடம் அந்த 3 பேரும் ஏதோ விபரம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த 3 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திஇருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர்.
இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரதீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பேரும் பிரதீப்பின் முகத்தை சிதைத்தனர். இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரப்தீபை வெட்டி கொலை செய்தது கரந்தை பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (26), கீழ அலங்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவக்குமார் (25), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கரந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ”இதுபோன்ற சம்பவங்கள் மது போதையினால் ஏற்படுகிறது. இளம் வயதினர் தற்போது போதைக்கு அடிமையாகி ஆயுதங்களை தூக்குகின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை அழிந்து போய்விடுகிறது. தஞ்சை பகுதியில் இதுபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகைக்கடைக்காரரிடம் போதையில் கடன் கேட்டு அவரை வெட்டி கொலை செய்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றனர்.