உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் தம்பதி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்தத் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கத்தம்புர் என்ற கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த பரசுராம் மற்றும் சுனைனா தம்பதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததாக அன்குள் மற்றும் வீரன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இறந்த குழந்தையின் உடலை வெட்டி ஈரல் உட்பட உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட அதிர்ச்சியான உண்மையும் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போக்சோ சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற தலைமை நீதிபதி சமயம் ரிஷி குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பரசுராம் மற்றும் சுனைனா தம்பதியினருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.