நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் முதல் நாளே சுமார் ரூ.100 கோடி வசூலை எட்டியது எனவும் 7 நாள் முடிவில் உலகளவில் ரூ.500 கோடியை நெருங்கியுள்ளதாகவும், விக்ரம் படத்தின் வசூலையும் முறியடித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் வசூல் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த படம் வெளியாவதற்கு முன்பில் இருந்தே இந்த படத்தை கலாய்த்து வருகிறார் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இந்த படம் வசூலில் சாதிக்கவில்லை என்றும் ரஜினி ரசிகர்கள் வடை சுட்டு வருகிறார்கள் என்றும் பதிவுகளை போட்டு ரஜினி ரசிகர்களுடன் மல்லுக்கட்டி வருகிறார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தின் வசூலைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயிலர் படம் 1 வாரத்தில் 375.4 கோடிக்கு மேல் வசூலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை 500 கோடி எல்லாம் வசூலிக்கவில்லை, விக்ரம் படத்தின் வசூலையும் முந்தவில்லை என்று தெளிவாகியுள்ளது. இருந்தாலும் படத்திற்கு கூட்டம் குறையாமல் தியேட்டருக்கு மக்கள் செல்கின்றனர் என்பதால் 500 கோடி வசூல் தூரத்தில் இல்லை என கூறி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.