இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் சொகுசு கார் விவகாரம் தொடர்பாக அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி என்ற இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும் ரூ.13,07,923 நுழைவு வரி செலுத்தக் கோரி கடந்த 2019ம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நுழைவு வரியுடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என ஹாரிஸ் ஜெயராஜுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஹாரிஸ் ஜெயராஜுக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோரிடம் வழக்கறிஞர், இவருக்கு மட்டும் அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது எனவும் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.