திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை தாய், குழிதோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்து – ரேணுகா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், ரேணுகாவின் கணவர் முத்து கடந்த 7 வருடங்களாக திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, தனது 3 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் ரேணுகா, குடவாசலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கும் கமலேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி ரேணுகா கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேணுகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ரேணுகா குழந்தையை வீட்டின் கொல்லைப் புறத்தில் புதைத்து விட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், ரேணுகா குழந்தையை கொன்று புதைத்தாரா? அல்லது குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் நேரில் வந்து விசாரணை செய்தனர். இந்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.