குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தரமற்ற கேன் குடிநீரை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும்.
அதேபோல், கேன்களின் நிறம் மாறும் பட்சத்தில் மீண்டும் அதில், குடிநீரை நிரப்பி விற்பனை செய்யக் கூடாது. தரமின்றியும், முறையான அனுமதின்றியும் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கிராமும், மெக்னீசியம் 5 முதல் 30 மி.கிராமும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி, உற்பத்தி, காலாவதி தேதி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டுமென குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.