ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரின் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அவர்கள் வீட்டில் கொள்ளை அடித்தது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை அருகம்பாக்கம் பகுதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் உமாசங்கர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வாடகைக்கு கேட்பது போன்று புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காவல்துறை ஆய்வாளரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த நாப்பது சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர் . இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர். மணிகண்டன் துரைசிங்கம் துரைப்பாண்டி உள்ளிட்ட ஐந்து பேரை இந்த வழக்கில் காவல்துறை கைது செய்தது. காவல்துறையின் விசாரணையின் போது அந்தப் பெண்மணியை நிர்வாணமாக வீடியோ எடுத்த துரைசிங்கம் மற்றும் துரைசாமி ஆகியோர் தப்பி ஓட முயன்ற போது கால் இடறி விழுந்து எலும்புகளை முறித்துக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வரும் காவல்துறை திருடிச் சென்ற நகை மற்றும் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இடங்களைப் பற்றிய தகவல்களை அறிய தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தனியாக இருக்கும் வயது முதிர்ந்த பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் .