கர்நாடக மாநிலத்தில் கூலிப்படையினை ஏவி, மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நாராயணசாமி 70 வயதான இவர் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த விசாரணையின் முடிவு காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. போலீஸ் விசாரணையில் நாராயணசாமியின் மகன் மணிகண்டா தனது தந்தையை கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏவி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மணிகண்டா மற்றும் நான்கு கூலிப்படையினரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் தனது தந்தையை கொலை செய்வதற்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இவர்களது திட்டப்படி நாராயண சுவாமியை பிப்ரவரி 13ஆம் தேதி பெங்களூருவில் உள்ள மரத்தஹள்ளி என்ற இடத்தில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் பகுதியில் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை நடந்து இரண்டு வாரங்களுக்கு பின் தற்போது இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் சொத்து விவகாரம் தொடர்பாக தனது மகனால் நாராயணசாமி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.