திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் குடிமகன் ஒருவர் ரசீது கேட்டு ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலாகியுள்ளது.
அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மதுவை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி அந்த நபர் தனக்கு ரசீது வழங்காவிட்டால் டாஸ்மாக் மேலாளரை கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என மிரட்டும் தோனியில் பேசியிருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் இன்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து மேற்பார்வையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிறைய பேர் மது வாங்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் தான் வாங்கிய மது பாட்டில்களுக்கு ரசீது வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதனை அங்கு மது அருந்த வந்த நபர்களில் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விட்டனர். நெட்டிசன்கள் மதுக்கடையில் நியாயம் கேட்கும் குடிமகன் என்று அந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.