இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது..
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது..
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/turkey.jpg)
இந்நிலையில் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI – National Geophysical Research Institute) கணித்துள்ளது.. இது எதிர்காலத்தில் உத்தரகாண்ட் மற்றும் நேபாளத்தை பாதிக்கும் சாத்தியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
NGRI யின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பூமியின் மேற்பரப்பில் பல்வேறு தட்டுகள் உள்ளன, அவை தொடர்ந்து இயக்கத்தில் உள்ளன, மேலும் இந்திய தட்டு வருடத்திற்கு 5 செமீ நகர்கிறது, இது இமயமலையில் அழுத்தம் குவிவதற்கு வழிவகுக்கிறது. குவிந்துள்ள அழுத்தம், மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/a2afc397aaa4122207f2f23648e344cc4cbdb8d21c61e73f1ea9b0b2c3997d4a.jpg)
இமாச்சலத்திற்கும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையே உள்ள நில அதிர்வு இடைவெளி என குறிப்பிடப்படும் பகுதி, அதாவது உத்தரகாண்ட் உட்பட பல இடங்களிலும் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் இருக்கக்கூடும்..” என்று தெரிவித்தார்..
சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் குறித்து பேசிய அவர், கட்டிடங்களின் தரம் குறைந்ததால்தான் நாட்டில் சேதம் அதிகம் என்று கூறினார். மேலும் “ பூகம்பங்களைத் தடுக்க முடியாது, ஆனால் இழப்பைத் தடுக்க முடியும். நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன, எனவே பொதுமக்கள் அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்தார்..