ஆயுத பூஜை முன்னிட்டு 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையுள்ள நாட்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
இதில், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்; போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்; திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி பைபாஸ்(மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை) அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் செல்லும் பேருந்துக்கள் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப்பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்புப்பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
