பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேம்பாலத்தின் மீது பாலஸ்தீனத்தின் கொடியை பறக்கவிட்ட நிலையில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த தாக்குதலால் இதுவரை 2,704 குழந்தைகள் உட்பட 6,546 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், சிலிண்டர், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது. நிலைமையை சரி செய்ய பாலஸ்தீன ஆதரவு நாடுகள் ஐநா மூலம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. அதேபோல சர்வதேச அளவில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என 22 நாடுகளில் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாகவும், மே 17 இயக்கம் சார்பாகவும், இடதுசாரிகள் சார்பாகவும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. கல்வி நிலையங்களிலும் இடதுசாரி மாணவர் இயக்கமான, இந்திய மாணவர் சங்கத்தினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதவாக கோவை உக்கடம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் பாலஸ்தீன கொடியை சிலர் பறக்கவிட்டனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து, கொடியை பறக்கவிட்டவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இதனையடுத்து, ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பை சேர்ந்த ஒருவர், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த இருவர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.