சென்னை மாதவரம் பகுதியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாதவரத்தை அடுத்த 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டி இருக்கும் லேத் பட்டறை அருகில் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அந்தப் பகுதியில் லாரியை நிறுத்தி இருந்த மணலியைச் சார்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை எடுப்பதற்காக சென்று இருக்கிறார். அப்போது அவரது லாரி அருகே திருநங்கை ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் பால்பண்ணை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் இறந்து கிடந்த திருநங்கையின் பெயர் சனா என்பதும் அவர் எண்ணூர் அருகே உள்ள ஆல் இந்தியா ரேடியோ தெருவில் இருக்கும் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தார் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. மேலும் அவரை யார் கொலை செய்தார்கள்? இந்த கொலைக்கான காரணங்கள் என்ன? என்பது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து ஏதேனும் ஆதாரம் சிக்குமா? என தீவிரமாக தேடி வருகிறது காவல்துறை. பெட்ரோல் பங்க் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் திருநங்கை. இதனால் அவரை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்திருக்கிறார்களா? என்ற ரீதியிலும் காவல்துறை விசாரணையை நடத்தி வருகிறது.