28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, இருக்கின்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (37) இவருடைய மனைவி வினோதா (28) என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீகாந்த்(5), யாஷிகா(3) என்ற இரு குழந்தைகள் இருக்கின்றன. துளசிராமன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான், கடந்த ஒன்பதாம் தேதி அனுமந்தபுரம் கிராமத்தில் இருக்கின்ற தன்னுடைய கணவர் வீட்டில், வினோதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பக்கத்தில் இருந்த நபர்கள், உடனடியாக நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில், காவல்துறையினர் வினோதாவின் உடலை கைப்பற்றி, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, வினோதாவின் தாய் செண்பகம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில், புகார் வழங்கினார்.
அந்த புகார் மனுவில், தன்னுடைய மகளின் இறப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். வினோதாவுக்கு திருமணமாகி, ஏழு வருடங்களே ஆகியிருப்பதால், வரதட்சணை கொடுமை காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று மன்னார்குடி ஆர்டிஓ கீர்த்தனா மணி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.