மதுரையில் இளம்பெண் ஒருவர் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ஆனையூர் செந்தூர் நகரைச் சார்ந்தவர் பிரித்விராஜன். இவரது மகள் லத்திகா வயது 19. இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் போலவே லத்திகாவும் அதிகமாக செல் போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது தந்தை லத்திகாவை பலமுறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல லத்திகா தனது செல்போனே உலகம் என அதில் மூழ்கி இருந்திருக்கிறார். இதனைக் கண்டு கடும் கோபமான அவரது தந்தை லத்திகாவை மிகக் கடுமையாக கண்டித்ததாக தெரிகிறது . இதனால் மன வருத்தத்தில் இருந்த லத்திகா தனது அறைக்குச் சென்று விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்க நிலையில் இருந்த அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ராஜாஜி மருத்துவமனையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பினர். செல்போன் பயன்படுத்தியதற்காக தந்தை திட்டியதால் 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மதுரையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.