அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் விருப்பப்பட்டால் தங்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை நடைமுறையில் இருந்து வருகிறது. கருக்கலைப்பு மாத்திரைகள் அமெரிக்க சந்தைகளில் சாதாரணமாக விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், கருக்கலைப்பு செய்யும் உரிமையை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்களில் கருக்கலைப்புக்கான தடை அமலில் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், பொதுமக்கள் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடத்தி வந்தன. கருக்கலைப்பு தங்களின் உரிமை என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரையை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனம் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நீதித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்கும் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மேலும், மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரையை தற்காலிகமாக பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரைகள் இனி அமெரிக்காவில் தடையின்றி கிடைக்கும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றி அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ”கீழ் நீதிமன்றத்தின் முடிவுகள், உணவு மற்றும் மருந்துக் கழகத்தின் மருத்துவ நடைமுறைகளை முடக்கி, பெண்களின் உரிமைகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவால், மைப்பிரிஸ்டோன் மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும். பெண்களின் சுகாதாரத்தில் அரசியல் நோக்கோடு நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிரக நான் தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.