பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. அவர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

சுஷாந்தின் மரணம் தொடர்பாக விசாரணை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தற்போது அவரது மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை… அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சுஷாந்த் சிங் இறந்தபோது, 5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். பிரேத பரிசோதனைக்கு சென்றபோது தான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் 3 இடங்களில் காயங்கள் இருந்தன.

உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ மட்டும் எடு என சொன்னார்கள். பின்னர் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம்” என அவர் கூறினார். ரூப்குமார் சொல்வது உண்மையாக இருந்தால், சுஷாந்தை கொன்றது யார்? அதற்கு என்ன காரணம் என்கிற கேள்வி தான் எழுகிறது. இதுகுறித்து போலீசார் ரூப்குமாரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரூப்குமார் வெளியிட்ட தகவல்களால் தற்போது சுஷாந்த் சிங் மரணம் குறித்த விவாதம் பாலிவுட்டில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.