அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணிக்கு முயற்சிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முதன்முறையாக, கடந்த 1998 மக்களவைத் தேர்தலில் உருவானது. அது ஓராண்டு மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் 2004 மக்களவைத் தேர்தலை, பாஜகவுடன் இணைந்து அதிமுக சந்தித்தது. எனினும், அந்தத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது. இதனால், இனிமேல் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்பின், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணி நீடித்தது. எனினும், இரு தேர்தல்களிலும் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிபெறவில்லை.
இந்த சூழலில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, கட்சியை வளர்க்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். அத்துட்ன, கூட்டணிக் கட்சியான அதிமுக மீதும் விமர்சனம் வைத்தார். இதனால் இருகட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதன் உச்சமாக அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலையில் கருத்தால் அதிமுகவினர் கொந்தளித்த நிலையில், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிரடியாக அறிவித்தது.
இந்த நிலையில், அதிமுக தலைமையை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு பாஜக தரப்பில் முயற்சிப்பதாக தகவல்கள் பரவின. அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், கூட்டணி பிரச்சனை விரைவில சரிசெய்யப்படும் என்றார்.
இந்த நிலையில், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று மீண்டும் அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தருமபுரியில் அளித்த பேட்டியில், “அதிமுக மீதான அச்சத்தால், பாஜக – அதிமுக இடையே மீண்டும் கூட்டணி அமையும் என்று சிலர் கூறி வருகின்றனர். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறுவது ஒருபோதும் நடக்காது.
பாஜகவுடன் கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வு. அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டு இந்த முடிவை அறிவித்தார். அண்ணாமலையை நீக்கும்படி நாங்கள் கோரவில்லை; அந்த கேள்வியும் எழவில்லை. அவ்வாறு கோருவது சிறுபிள்ளைத்தனமானது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தனி அணி போட்டியிடும்” என்று தெரிவித்தார்.