சென்னையில் நடைபெற்ற இந்தியா – நேபால் மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்தியா – நேபால் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி செயல்பட்டார். போட்டி தொடங்கிய துவக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், முதல் பாதியில் இரண்டு அணிகளுமே எந்த கோலையும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி துவங்கிய 51ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சௌமியா குகுலோத் முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு பூஸ்ட் கொடுத்தார். அதன் பின் தொடர்ச்சியாக இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், 68-வது நிமிடத்தில் அணியின் கேப்டன் இந்துமதி 2ஆவது கோல் அடித்தார். 2-0 என்ற கணக்கில் இருந்த நிலையில், இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் நேபால் அணி வீராங்கனை சபித்தரா பந்தாரி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தார். இதனால், போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/1676511642339.jpeg)
15 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறும் நிலையில், பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாததால், வரும் 18ஆம் தேதி நடைபெறவிருகும் மற்றொரு போட்டிக்கு ரசிகர்கள் அதிக அளவில் வர வேண்டும் என விளையாட்டு வீரர்கள் சார்பில் எதிர்பார்ப்புடன் வேண்டுகோள் வைக்கப்பட்டது. கடைசியாக 2008ஆம் ஆண்டு தான் சர்வதேச கால்பந்து போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.