வங்காளதேசத்தை சேர்ந்தவர் பைசல் அகமது. இவர் அல்-கொய்தா அமைப்பின் தீவிரவாதி ஆவார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தை உள்ள எழுத்தாளர் ஒருவரை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பைசல் அகமது உள்பட மூன்று பேருக்கு வங்காளதேச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் பைசல் அகமது வங்காளதேசத்தில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து அசாமில் வசித்து வந்தார். பிறகு பெங்களூருவுக்கு வந்து பொம்மனஹள்ளியில் வாடகைக்கு, வீடு எடுத்து வசித்து வந்தார்.
மேலும் பொம்மனஹள்ளியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். மேலும் பைசல் அகமது, இந்தியாவில் பிறந்தவர் என்பதற்கான அடையாளங்களான, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவைகளையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் பைசல் அகமது பெங்களூருவில் வசித்து வருவது பற்றி வங்காளதேச காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பைசல் அகமதுவை கைது செய்வதற்காக வங்காளதேச காவல்துறையினர் கொல்கத்தா காவல்துறையினரின் உதவியை நாடினர்.
இந்த நிலையில் பெங்களூரு பொம்மனஹள்ளி காவல்துறையினரை தொடர்பு கொண்டு பேசிய கொல்கத்தா காவல்துறையினர், பைசல் அகமது பற்றிய தகவல்களை தந்து அவரை கண்காணிக்கும்படி தெரிவித்திருந்தனர். இதனால் பைசல் அகமதுவின் நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு வந்த வங்காளதேசம், கொல்கத்தா காவல்துறையினர் பொம்மனஹள்ளி காவல்துறையுடன் இணைந்து பைசல் அகமதுவை கைது செய்து வங்காளதேசத்திற்கு அழைத்து சென்றனர். பெங்களூருவில் கடந்த ஏழு வருடமாக பைசல் அகமது வசித்து வந்துள்ளார்.ஆனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.