வரும் மே 9ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், திவாலாகும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இதனையடுத்து இந்நிறுவனம், தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்திருந்தது. அதில், அமெரிக்காவில் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான என்ஜின்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இதனால் கடும் இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையை சந்தித்திருக்கிறது.
இதனால் வரும் மே 5ஆம் தேதி வரை தன் விமான சேவையை முற்றிலும் நிறுத்துவதாக கோ ஃபர்ஸ்ட் முதலில் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது மே 9 ஆம் தேதி வரை சேவை நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செயல்பாட்டு காரணங்களால் மே 9ஆம் தேதி வரையிலான கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விமானங்கள் ரத்தால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். விரைவில் டிக்கெட் தொகை ரீஃபண்ட் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.