குஜராத் மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர்கள் பிரிஜிகுமார் மற்றும் பூஜா தம்பதியினர். இவர்களுக்கு 11 வயதில் தன்மென் என்ற மகன் இருக்கிறான். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற கடந்த வருடம் முயற்சி செய்து இருக்கிறார். இதற்காக சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கும் செல்ல ஏற்பாடு செய்யும் ஏஜெண்டுகளை நாடி இருக்கிறார். அந்தக் கும்பலின் ஆலோசனைப்படி தனது மகன் மற்றும் மனைவியுடன் நவம்பர் 11ம் தேதி மும்பையில் இருந்து துருக்கி சென்று இருக்கிறார். பின்னர் துருக்கியில் இருந்து மெக்சிகோ சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையவது தான் அவர்களது திட்டம்.
இதன்படி துருக்கியைச் சென்றடைந்த அவர் அங்கிருந்து மெக்சிகோ சென்றுள்ளார். பின்னர் மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் செல்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார். அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுப்பதற்காக மிகப்பெரிய எல்லை சுவரை கட்டியிருந்தார். அது டிரம்ப் சுவர் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த சுவரின் வழியாக சட்ட விரோதமாக ஏற முயற்சி செய்திருக்கின்றனர் பிரிஜிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர். சுவரைக் கடக்க முயன்ற போது துரதிஷ்டவசமாக மூவரும் சுவரில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இந்த எதிர்பாராத சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் பிரிஜிகுமார். அவரது மகன் தன்மண் மற்றும் அவரது மனைவி பூஜா ஆகியோர் படு காயங்களுடன் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள குஜராத் காவல்துறை சட்டவிரோதமாக அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த கும்பலை கைது செய்தனர். மேலும் அந்த கும்பலை சார்ந்த ஏழு பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.