fbpx

ஒரே நாளில் இதுவரை இல்லாத சாதனை..!! ரூ.217 கோடி வருவாய்..!! அசத்திய பத்திரப் பதிவுத்துறை..!!

பத்திரப்பதிவு மூலம் வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் வருவாய் பத்திரப் பதிவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த மாதம் 24ஆம் தேதி மட்டும் 26,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது பதிவுத்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான வசூல் சாதனையாகும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக்கூட்டரங்கத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டு 2023 ஜனவரி வரை அடைந்த வருவாயை விட 2024 ஜனவரி முடியவுள்ள காலத்தில் கூடுதலாக ரூ.952.86 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, துணைப்பதிவுத்துறை தலைவர்கள் அனைவரும் பதிவுத்துறைக்கு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையும் பொருட்டு தத்தம் மண்டலத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் அலுவலகம் வாரியாக சீராய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்திய முத்திரைச்சட்டப்பிரிவு 47A-ன் கீழ் விரைவில் இறுதியாணை பிறப்பித்து இழப்பினை வசூலிக்கவும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலித்து வருவாயினை பெருக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும், பதிவுக்கு வரும் மக்களின் பணிகளை செவ்வனே செய்து புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிந்து, அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடைந்திட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

டெல்லி: "600 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு.." புதிய மசூதி கட்டி தர உள்ளூர்வாசிகள் கோரிக்கை.!

Tue Feb 6 , 2024
தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள சஞ்சய்வான் பகுதியில் இருந்த 600 ஆண்டுகள் பழமையான மசூதியை கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இது தொடர்பாக அதே இடத்தில் புதிய மசூதி கட்டி தர வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சஞ்சய்வான் பகுதியில் “சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடமாக மசூதி இருந்ததால் ஜனவரி 30 அன்று அகூந்த்ஜி மசூதி மற்றும் பெஹ்ருல் உலூம் மதரஸா இடிக்கப்பட்டதாக டெல்லி […]

You May Like