fbpx

சிக்குமா ஆவணம்…? 11 மணி நேரத்தை கடந்து விடிய விடிய நீடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…!

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் 11 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர். 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டாவது தவணையாக நேற்று காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை , தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் 11 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்கு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அலுவலகத்தின் வெளியிலயே 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழல் நிலவியது.

Vignesh

Next Post

தண்ணீர் குடித்தால் உயிர் போகுமா.? என்னையா சொல்றீங்க.? அதிகம் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்.!

Sat Dec 2 , 2023
தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத பானமாகும். நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கும் நீரேற்றத்துடன் இருப்பதற்கும் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகமான தண்ணீர் குடிப்பது உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் […]

You May Like