2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன் எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்தவித சான்றையும் சமர்பிக்க தேவையில்லை. பணம் மாற்ற எந்தவித படிவமோ, அடையாள ஆவணமோ வேண்டியதில்லை. மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கி இந்த விளக்கமளித்துள்ளது.
பணத்தை எப்படி மாற்றுவது..?
2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம்.
வங்கிகள் மறுத்தால் புகார் அளிக்கலாம்…
வங்கிக் கிளையோ அல்லது வேறு எந்த நிறுவனமோ 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள மறுக்கும் சூழ்நிலையை யாராவது சந்தித்தால், புகாரின் பெயரில் அதற்கான தகுந்த வழி கிடைக்கும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் தனிநபர்கள் அந்தந்த வங்கிகளுக்குச் சென்று புகார் தரலாம். செப்டம்பர் 30, 2023க்கு முன் இதைச் செய்வது முக்கியம். 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதிலில் புகார்தாரர் அதிருப்தி அடைந்தாலோ, RBI போர்ட்டல் cms.rbi.org.in இல் புகாரைப் பதிவு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.