குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 24.07.2022 அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால் (integrated – two part OMR answer sheets), விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்யப்படுகிறது.

அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாளில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. இம்முறை விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே எஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி, மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்திறகும் கூடுதலாக உள்ளது. கடந்த தேர்வுகளை ஒப்பிடுகையில், 3 மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.
மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம், பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத் தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மிகுந்த கவனத்துடனும், எவ்வித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். எனவே, தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.