முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்றைய தினம் மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை திமுக மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதை போல், இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாளான
ஜூன் 3ஆம் தேதி இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்றைய தினம் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்பட உள்ளது.