பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நீதிபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என கட்சியினரை வழி நடத்த வேண்டும். கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கடலூரில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்திருப்பதும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது பா.ம.க. மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்களை பாதிக்கும் சிக்கல்கள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதிக்காமல் அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகப் படுகொலை ஆகும் என அன்புமணி கூறியுள்ளார். கடலூரில் தான் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். வேறு மாவட்டத்திலும் நடத்த தங்களுக்கு விருப்பமில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.