பங்காரு அடிகளாருக்கு பூ மாலை அணியும் வழக்கம் இல்லாததால், அவருடைய உடலுக்கு யாரும் மாலை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவில்லை.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர். இந்த நிலையில் இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து வேலூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இறுதி அஞ்சலியை செலுத்த மேல்மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள். பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால் சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூர் செல்கிறார். பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
பங்காரு அடிகளாருக்கு பூ மாலை அணியும் வழக்கம் இல்லாததால், அவருடைய உடலுக்கு யாரும் மாலை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவில்லை. நேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கும் மாலை வைத்து மரியாதை செலுத்த அனுமதி கொடுக்கப்படவில்லை. இதே நடைமுறை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.