2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார்.. அப்போது நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.. இந்நிலையில் குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்புப்படுத்தி ” India : The Modi Question..” என்ற பெயரில் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்துள்ளது..
இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த 17-ம் தேதி ஒளிபரப்பப்பட்டது.. மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.. இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகாவும், இது ஒரு சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விமர்சித்திருந்தது..

இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், சில யூடியூப் சேனல்கள் பதிவேற்றியதாகத் தெரிகிறது. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (I&B) இன்று பிபிசி ஆவணப்படத்தின் முதல் அத்தியாயத்தை பகிர்ந்த பல யூடியூப் வீடியோக்களை பிளாக் செய்துள்ளது.. சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோக்களுக்கான இணைப்புகளைக் கொண்ட 50 க்கும் மேற்பட்ட ட்வீட்களையும் பிளாக் செய்ய வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் யூடியூப் தளத்தில் மீண்டும் அந்த ஆவணப்படம் பதிவேற்றப்பட்டால், அந்த வீடியோவையும் பிளாக் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற தளங்களில் உள்ள வீடியோவிற்கான இணைப்பைக் கொண்ட ட்வீட்களை அடையாளம் காணவும், அதனை பிளாக் செய்யவும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..