ஆந்திர மாநிலத்தில் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார்.
அந்த மாநிலத்தில், ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்ற பகுதிகளில் அனைத்து விதமான வசதிகளையும் அந்த மாநில அரசு செய்து கொடுக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்ற தொகுதிகளில் பெரிய அளவில் யாரும், எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்திருக்கிறது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் நகராட்சி தேர்தலின்போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள் என்று பல வாக்குறுதிகளை பொது மக்களுக்கு வழங்கி இருக்கிறார். அதன் மூலமாக பொதுமக்கள் அவரை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டங்களுக்காக ராமராஜ் நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசை கேட்டபோது, அரசு அதனை வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த 31 மாதங்கள் சென்ற பின்னரும் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தன் மேல் நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வேதனையில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், நேற்று நகர சபை கூட்டம் நடந்தது. அப்போது எழுந்து நின்று தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், திடீரென்று தன்னுடைய காலில் அணிந்திருந்த காலணியால் தன்னைத்தானே அடித்துக் கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததால் தன்னை தானே கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது