பெண் காவலர்கள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்..
தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இது பொன் விழா அல்ல. பெண் விழா.. தமிழக காவல்துறையில் அனைத்து நிலைகளிலும் 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.. வீட்டையும், நாட்டையும் சேர்த்து பெண் காவலர்கள் கவனித்து வருகின்றனர்.. காவல் பணியோடு குடும்ப பணியையும் சேர்த்து பெண் காவலர்கள் பார்த்து வருகின்றனர்.. எனவே ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு 2 சல்யூட்.. இந்த பொன்விழா கொண்டாடும் நாளில் பெண் காவலர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
- பெண் காவலர்களின், காவல் வருகை அணிவகுப்பு இனி, காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என்று மாற்றி அமைக்கப்படும்..
- சென்னை, மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்..
- அனைத்து காவல்நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கு என்று கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித்தரப்படும்..
- பெண் காவலர்கள் காவல் நிலையங்களுக்கு பணிக்கு வரும் போது, தங்கள் குழந்தைகளை பராமரிக்க சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது.. விரைவில் தேவையான அனைத்து இடங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்..
- கலைஞர் காவல் பணி விருது, கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும்..
- பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு காவல் அலுவலர்களுக்கு உரிய உத்தரவு வழங்கப்படும்..
- பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும்..
- பெண் காவலர்களின் தேவைகள், பிரச்சனைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக ‘ காவல்துறையில் பெண்கள்’ என்ற தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்..
- டிஜிபி அலுவலகத்தில் பெண் காவலர்களுக்கு பணி வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்படும்..
இந்த அறிவிப்புகள் உங்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும் என்று நம்புகிறேன்.. சட்டத்தை நிலைநாட்ட உங்கள் வீரமும், திறமையும், கருணையும் பயன்படட்டும்.. அமைதியான தமிழ்நாடு உருவாக உங்கள் பணி உதவி செய்து வருகிறது.. குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் அல்லாமல், குற்றங்களே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும்.. அதற்கு பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும்..” என்று தெரிவித்தார்..