தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்..
ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியினால் இலட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் கடந்த 8-ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.. சட்டப்பேரவையில் 2-வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.. ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.. மேலும் ரூ. 5,000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்..
முன்னதாக இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தனித்தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்.. அந்த தீர்மானத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க ஜனாதிபதி, மத்திய அரசு குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும்.. தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தப்பட்டிருந்தது..