காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து இன்று பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பதால், கே.எல்.ராகுல் காவிரி விவகாரம் தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘காவிரி எப்போதும் நமதே (கர்நாடகம்), காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி அதிகளவு தண்ணீர் இங்கு குவிகிறது. ஆனால் காவிரி தண்ணீரை பயன்படுத்த ஆண்டுதோறும் கன்னடர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இதுதான் எங்களின் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து’ என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து கே.எல்.ராகுல் அந்த பதிவை நீக்கியுள்ளார்.