வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய Citizen Login-ஐ முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய் துறை சான்றுகள், 6 வகையான முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைதாகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது வழக்கம்.
பொது இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு உட்பிரிவு இல்லாத மனு ஒன்றிற்கு ரூ.60-ம், உட்பிரிவு உள்ள இனங்களுக்கு ரூ.120/-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள், கிராம வறுமைஒழிப்பு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுக வேண்டும். சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு edm2dpi.tnega@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ அழைத்து புகார்களை தெரிவிக்கலாம்.